×

சோர்வடைந்த அதிகாரிகளால் மீண்டும் பாலிதீன் பயன்பாடு அதிகரிப்பு மண்வளம் பாதிக்கும் அபாயம்

ஆர்.எஸ்.மங்கலம், அக்.18: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் மண் வளம் பதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாக தடைவிதிக்கப்பட்டு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னேற்பாடாகவே கலெக்டரின் நடவடிக்கையின் பேரில் கடந்த ஆண்டே பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், திருப்பாலைக்குடி, ஆனந்தூர், சனவேலி, மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சில பெட்டிக்கடை முதல் டீக்கடை, பேக்கரி, ஹோட்டல் மற்றும் அனைத்து கடைகளிலும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்வதற்கு முக்கிய நோக்கம் மழை பெய்யும் பொழுது மழைநீரை நிலத்தடிக்கு செல்லாமல் தடுத்து நிறுத்துகிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைய வாய்ப்பு உள்ளது. மேலுமத் சுற்றுப்புற சூழலுக்கு உகந்ததாக இல்லாமல் மாசுபடுகிறது என்பதற்காகவே பிளாஸ்டிக் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கு எதிராகவே பாலிதீன் கவர்களில் டீ காபி மற்றும் ஹோட்டல்களில் சட்னி-சாம்பார் போன்றவற்றை சூடாக கட்டிக் கொடுத்து விடுகின்றனர். இதனால் மனிதர்களுக்கு உடல் உபாதை பாதிப்பு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை அறியாமல் மீண்டும் மீண்டும் இந்த தவறை கடைக்காரர்கள் செய்கின்றார்கள். பெரும்பாலான ஹோட்டல்களில் வாழை இலைக்கு பதிலாக பிளாஸ்டிக் கவர் மற்றும் கம்ப்யூட்டர் இலை என்று சொல்லக் கூடிய  ரசாயனம் பூசப்பட்ட இலைகள் பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக உள்ளது. ஆரம்பத்தில் வேகமாக சோதனை செய்த அதிகாரிகள் தற்போது சோதனை செய்யாமல் சோர்வடைந்து உள்ளதால் சோதனையில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க வேண்டிய சுகாதாரத் துறையும், உணவு பாதுகாப்பு துறையும் முனைப்புடன் செயல்படாமல் வேடிக்கை பார்ப்பதாக குற்றம்சாற்றுவதுடன் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை