திருப்பத்தூர், அக்.18: திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகே சமுதாய சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையில் சமுதாய சுகாதார நிலைய கட்டிடத்தின் மேற்கூரை சிமென்ட் பூச்சுகள், சிலாப்புகள் திடீரென பெயர்ந்து விழுந்தது. இதையடுத்து, ஒப்பந்ததாரர் வரவழைக்கப்பட்டு சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
ஆனால் மீண்டும் தரமற்ற முறையில் இப்பணி நடப்பதாக கூறி அப்பகுதி மக்கள் குனிச்சி- தர்மபுரி சாலையில் நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து, குனிச்சி விஏஓ சுரேஷ் கந்திலி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் வெங்கடேசன், சுதாகர் உட்பட 42 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.