×

திருவள்ளூர், திருத்தணி ரயில் நிலையங்களுக்கு 20 ஆயிரம் அபராதம்

திருவள்ளூர், அக். 18: டெங்கு கொசு புழு உற்பத்திக்கு வழிவகுத்த திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு நகராட்சி அதிகாரிகள் 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். திருவள்ளூர் நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு, நகராட்சி நிர்வாகம் 27 வார்டுகளிலும் வீடு வீடாக சென்று, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர, நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி தலைமையில் சுகாதாரத்துறை அலுவலர் கோவிந்தராஜ், ஆய்வாளர்கள் ரமேஷ், ராமகிருஷ்ணன் ஆகியோரும் நேரில் சென்று, ‘டெங்கு’ விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை நகராட்சி ஆணையர் தலைமையிலான குழுவினர் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது, ரயில் நிலையத்தில் உள்ள தீயணைப்பு வாளி உட்பட பல இடங்களில் டெங்கு கொசு புழு வளர்ந்துள்ளதை கண்டுபிடித்து அழித்தனர்.
அதை தொடர்ந்து, டெங்கு கொசு புழு உற்பத்திக்கு வழிவகுத்த திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு 10 ஆயிரம் அபராதம் விதித்தார். இதற்கான ரசீதை நிலைய மேலாளரிடம், நகராட்சி ஆணையர் மாரிச்செல்வி வழங்கினார். இதேபோல் டெங்கு கொசு புழு இருக்கும் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் வசூலிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

திருத்தணி:  திருத்தணி நகராட்சியில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு நகராட்சி நிர்வாகம், 50 பேரை ஒப்பந்தம் அடிப்படையில் நியமித்து, 21 வார்டுகளிலும் வீடு, வீடாக சென்று கொசு ஒழிப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இதுதவிர நகராட்சி ஆணையர் ராஜலட்சுமி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் மாரிமுத்து, மேற்பார்வையாளர் கார்த்திக் உள்பட 7 பேர் கொண்ட குழுவினரும் சுழற்சி முறையில் ஒரு நாளைக்கு இரண்டு வார்டு வீதம் நேரில் சென்று டெங்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை ஆணையர் தலைமையிலான குழுவினர் திருத்தணி ரயில் நிலையத்தில் டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டனர். அப்போது ரயில் நிலையத்தில் முதல் நடைமேடையில் நிலைய அதிகாரி அறைக்கு முன் வைத்திருந்த தீயணைப்பு வாளியில் டெங்கு கொசு புழு வளர்ந்துள்ளதை கண்டுபிடித்து அழித்தனர்.  அதனை தொடர்ந்து ஆணையர் ராஜலட்சுமி, திருத்தணி ரயில் நிலையத்திற்கு 10 ஆயிரம் அபராதம் விதித்தார். இதேபோல் டெங்கு கொசு புழு இருக்கும் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Thiruvallur ,railway stations ,Tirunelveli ,
× RELATED திருவள்ளூர் தொகுதியில் வேட்பாளர்கள்...