×

செங்கல்பட்டு குப்பை கிடங்கை விரிவாக்கம் செய்வதற்காக குடியிருப்புகளை அகற்ற கூடாது

செங்கல்பட்டு, அக். 18: செங்கல்பட்டு  நகராட்சி பச்சையம்மன் கோயில் அருகே குப்பை கிடங்கு செயல்படுகிறது. இந்த கிடங்கில், தினமும் சுமார் 50 டன் குப்பை கழிவுகள் சேமிக்கப்படுகின்றன. இதனால், நகராட்சி அதிகாரிகள் குப்பை கிடங்கை விரிவாக்கம் செய்யும் நோக்கில், அதன் அருகே உள்ள அம்பேத்கர் தெருவில்  30 ஆண்டுகளுக்கும் மேலாக வசிக்கும் 500க்கு மேற்பட்ட குடும்பங்களை காலி செய்துவிட்டு, இந்த பகுதியை  முன்னறிவிப்பின்றி நகராட்சி அதிகாரிகள் கையகப்படுத்த கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்து, குடியிருப்புகளையும் அளவீடு செய்தனர். இதற்கு எதிப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் கடந்த 3  நாட்களாக நகராட்சியில் மனு கொடுத்தும்,  அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தினர். ஆனால் அதிகாரிகள், நேற்று  மீண்டும் குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தனர்.  இதனால், அப்பகுதி மக்கள் தங்களது குடியிருப்புகள்   எந்த நேரத்திலும் அகற்றப்படும் என அச்சமடைந்துள்ளனர்.

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி  தலைவர்  திருமாவளவன், நேற்று பச்சையம்மன் கோயில் அருகில் உள்ள குடியிருப்பு பகுதிகளை ஆய்வு செய்தார். அப்போது, அங்குள்ள பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது, பொதுமக்கள் சார்பில், 30 ஆண்டுகளுக்கு மேலாக 500 குடும்பங்கள்  வசிக்கிறோம். தற்போது குப்பை கிடங்கு விரிவாக்கத்துக்காக எங்களது வீடுகளை காலி செய்ய அதிகாரிகள் திட்டமிடுகின்றனர். எங்களது வாழ்வாதாரமான குடியிருப்பை அகற்ற கூடாது என கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவை பெற்றுக் கொண்ட திருமாவளவன், ஏழைகளின் குடியிருப்புகளை அதிகாரிகள் அகற்றக் கூடாது. குப்பை கிடங்கை பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத இடத்துக்கு மாற்ற வேண்டும். இது சம்பந்தமாக கலெக்டரிடம் பேசி, தீர்வு காண்பதாக உறுதியளித்தார்.

Tags : Residences ,bricklayer ,
× RELATED குடியிருப்புகளுக்கு பத்திரப்பதிவு...