×

பெண் தீக்குளிக்க முயன்ற விவகாரம் ஆதிவாசிகள் மகா சபா கலெக்டரிடம் புகார் தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாகர்கோவில், அக்.18:  நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயன்ற விவகாரத்தில் தூண்டிவிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கேட்டு ஆதிவாசிகள் மகா சபா சார்பில் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.
தமிழக ஆதி வாசிகள் மகா சபா தலைவர் ராமச்சந்திரன் காணி தலைமையில் காணி மக்கள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனு: குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கடந்த 14ம் தேதி மணலோடையை சேர்ந்த அங்கன்வாடி ஊழியர் சீதா என்பவர் தீக்குளிக்க முயன்றார். இவர் பல அங்கன்வாடி அமைப்பாளர்கள், அரசு ஊழியர்கள் குறித்து பொய் புகார் கொடுத்திருந்தார். ஆகவே குழந்தைகளின் பாதுகாப்புக்காக இவர் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததால் பணியை இவர் இழந்தார்.

அதன் பின்னர் இவர் மற்றவர்கள் மீது புகார் அனுப்புவதை வழக்கமாக கொண்டுள்ளார்.   இவரை அதே பகுதியை சேர்ந்த சிலர் அரசியல் ஆதாயத்திற்காக தற்போது தூண்டி விட்டுள்ளனர். ஆகவே அவதூறு பரப்புகின்ற சீதா மீதும், அவரை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேடுபவர்கள் மீதும்  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவில் அவரை தூண்டிவிட்டவர்கள் என்று சிலரது பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளது. மனு அளிக்க சீதாவின் உறவினர்களும் வந்திருந்தனர்.

Tags : Adivasi ,collector ,Maha Sabha ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...