சின்னசேலம், அக். 18:
கச்சிராயபாளையம் அருகே கடத்தூர் சாலையில் தார்சாலை மேடு பள்ளமாக இருப்பதால் தொடர் விபத்துகள் ஏற்படுtதால் போர்க்கால அடிப்படையில் தார்சாலையை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சின்னசேலத்தில் இருந்து கச்சிராயபாளையத்திற்கு செல்லும் தார் சாலையில் பஸ் போக்குவரத்து நடந்து வருகிறது. கச்சிராயபாளையத்தில் இருந்து கடத்தூர் வழியாக சின்னசேலம், ஆத்தூர், சேலம் போன்ற ஊர்களுக்கும், தலைவாசல், பெரம்பலூர் போன்ற ஊர்களுக்கும் தினமும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சென்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் இந்த சாலையில் ஏராளமான கரும்பு டிராக்டர் மற்றும் வாகன போக்குவரத்து நடந்து வருகிறது. கரும்பு சக்கை ஏற்றிய லாரிகளும் தினமும் கரூர் சென்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் ஏராளமான கார், வேன் போன்ற வாகனங்களும் சென்று வருகிறது.
இப்படி போக்குவரத்து மிகுந்த சாலையில் தெங்கியாநத்தம் முதல் தொட்டியம் வரையிலான சாலை ஆங்காங்கே மேடு, பள்ளமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் கடத்தூர் முன்புள்ள கடம்பரான்குன்று அரசமரம் முதல் தெங்கியாநத்தம் பஸ்நிறுத்தம் வரையுள்ள சாலை சீரமைப்பிற்காக ஒருபக்கம் தார்சாலை அமைத்தும், மறுபக்கம் தார்சாலை போடாமலும் உள்ளது. இதனால் ஒருபக்கம் மேடாகவும், மறுபக்கம் பள்ளமாகவும் உள்ளது. இந்தநிலை கடந்த ஒருமாத காலமாகவே உள்ளது. இதனால் இந்த சாலையில் இரவில் பைக் ஓட்டி வரும் வாகன ஓட்டிகள் தாறுமாறாக வாகனத்தை ஓட்டி அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றனர். நெடுஞ்சாலைத்துறையின் அலட்சியத்தாலேயே தொடர்விபத்துகள் நடந்து வருகிறது. ஆகையால் நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் இந்த தார்சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.