×

சசிகலா மீண்டும் சேர்ப்பா? ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்வர்

நெல்லை, அக். 18: அதிமுகவில் சசிகலா இணைவது குறித்து ஒருங்கிணைப்பாளர்கள் முடிவு செய்வர் என நெல்லை ரெட்டியார்பட்டியில் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார்.நாங்குநேரி தொகுதி அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணனை ஆதரித்து அமைச்சர் செல்லூர் ராஜூ ரெட்டியார்பட்டியில் நேற்று திண்ணை பிரசாரம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக அரசு பல்வேறு மக்கள் நல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. இதன்மூலம் 2021 சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் நாங்களே ஆட்சி அமைப்போம்.கிராமங்களில் குடிமராமத்து பணி, ஏழை தொழிலாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதி உதவி, கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.18 ஆயிரம் நிதி உதவி, அம்மா பரிசு பெட்டகம், பசுமை வீடுகள், மிக்ஸி, கிரைண்டர் என விலையில்லா பொருட்கள் உள்ளிட்ட சிறப்பான திட்டங்களை அதிமுக அரசு செயல்படுத்தி வருகிறது. முதல்வர் எடப்பாடி சமீபத்தில் வெளிநாடுகளுக்கு சென்று அந்நிய முதலீடுகளை ஈர்த்து வந்துள்ளார். மக்களின் அரசாக அதிமுக அரசு திகழ்கிறது. தமிழக முதல்வரை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து குறைகளை தெரிவிக்கலாம்.

பெண்களுக்கான திட்டங்கள் எவ்வளவோ எங்கள் ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளன. எனவே பெண் வாக்காளர்கள் ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். சசிகலா விடுதலை குறித்து கட்சியினர் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அவர் மீண்டும் அதிமுகவில் இணைவது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு செய்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.பேட்டியின் போது நெல்லை பேரங்காடி தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை, பாளை ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர் முத்துக்குட்டி பாண்டியன், பரவை ராஜா, எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் எம்எஸ்.பாண்டியன், ரெட்டியார்பட்டி மணி, மதுரை கருப்பசாமி, முத்துவேல், மாணவரணி குமார், சப்னா தினேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Sasikala ,Coordinators ,
× RELATED தாராபுரம் அலங்கியத்தில் பறக்கும் படை சோதனையில் ரூ.92 ஆயிரம் சிக்கியது