×

ஜெருசலேம் புனித பயணம் செய்ய நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்

ஊட்டி, அக்.18:நீலகிரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மக்கள் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்கு தமிழக அரசின் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம். இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டை சேர்ந்த கிறிஸ்தவர்கள் 2019-20ம் ஆண்டின் ஜெருசலேம் புனித பயணம் மேற்கொள்வதற்காக தமிழக அரசால் நபர் ஒருவருக்கு ரூ.20 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்பும் கிறிஸ்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இத்திட்டத்தின் கீழ் அைனத்து பிரிவினர்களை உள்ளடக்கிய 600 கிறிஸ்துவர்கள் இதில் 50 கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் புனித பயணம் மேற்கொள்ள அனுமதித்தும் அரசு ஆணையிட்டுள்ளது. இப்புனித பயணம் இஸ்ரேல், எகிப்து மற்றும் ஜோர்டன் ஆகிய நாடுகளில் உள்ள பெத்லகேம், ஜெருசலேம், நாசரேத், ஜோர்டான் நதி, கலிலேயா சமுத்திரம் மற்றும் கிறிஸ்தவ மத தொடர்புடைய பிற புனித தலங்களையும் உள்ளடக்கியது. www.bcmbcmw.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்ப படிவத்தை படியிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம்.

இத்திட்டத்திற்கான நிபந்தனைகள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான காலக்கெடு வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே புனித பயணம் செல்ல விருப்பமுள்ள பயனாளிகள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் மற்றும் உரிய இணைப்புகளுடன் அஞ்சல் உறையில் கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதியுதவி கோரும் விண்ணப்பம் 2019-20 என்று குறிப்பிட்டு இயக்குநர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமஹால் பாரம்பரிய கட்டிடம், முதல்தளம், சேப்பாக்கம், சென்னை 600005 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை 0423-2440340 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்

Tags : Jerusalem ,pilgrimage ,
× RELATED ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும்...