×

லோடு ஆட்டோவில் மின்கம்பி திருடிய 2 பேர் கைது

திருவையாறு, அக். 17: திருவையாறு நடுக்கடை மெயின்ரோட்டில் சிறப்பு சப்இன்ஸ்பெக்டர் திருஞானம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருவையாறில் இருந்து தஞ்சை நோக்கி வந்த லோடு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மின் கம்பங்களுக்கு இடையே இணைக்கப்படும் அலுமினிய மின்வயர் சுற்றிய 100 மீட்டர் கொண்ட ஒரு காயில் சுற்று இருந்தது. இதுகுறித்து விசாரித்தபோது திருவையாறு மின்சார வாரிய அலுவலகம் அருகில் இருந்து 100 மீட்டர் அலுமினிய கம்பியை திருடி வண்டியில் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லோடு ஆட்டோவை பறிமுதல் செய்து திருவையாறு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று மீண்டும் விசாரித்தனர். அதில் லோடு ஆட்டோ பட்டுக்கோட்டையை சேர்ந்த செந்தில் என்பவருக்கு சொந்தமானதும், ஆட்டோ டிரைவரான பட்டுக்கோட்டை மன்னை நகரை சேர்ந்த சூர்யா (23), அய்யம்பேட்டை மதகடி பஜார் பாலாஜி (19) ஆகியோர் மின் கம்பி காயில் திருடுவதற்காகவே பட்டுக்கோட்டையில் இருந்து திருவையாறு வந்தது தெரியவந்தது.இந்நிலையில் திருவையாறு மின்வாரிய உதவி மின்பொறியாளர் சசிகுமார் (33), ரூ.2 லட்சம் மதிப்புள்ள அலுமினிய மின்கம்பி திருட்டு போனதாக புகார் செய்தா். அதன்பேரில் திருவையாறு சப்இன்ஸ்பெக்டர் கார்த்திக் வழக்குப்பதிந்து சூரியா, பாலாஜி ஆகியோரை கைது செய்தனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...