திருத்துறைப்பூண்டி, அக்.17: திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வட்டசட்டப்பணிகள் குழு மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக ராக்கிங் எதிர்ப்பு கருத்தரங்கம், உலக உணவு தினம் மற்றும் உலக மயக்கவியல் தினம் நடைபெற்றது. தலைமையாசிரியர் திருமாறன் தலைமை வகித்தார். ஆசிரியர் சங்க செயலாளர் முகமதுரபிக் முன்னிலை வகித்தார். என்எஸ்எஸ்திட்ட அலுவலர் சக்கரபாணி வரவேற்றார். ராக்கிங் குறித்தும் அதனால் ஏற்படக்கூடிய விளைவுகள், ராக்கிங் நடைபெற்றால் புகார் கொடுக்க வேண்டிய இடம், குழந்தை தொழிலாளர்கள் குறித்த விழிப்புணர்வு, போஸ்கோ சட்டம், ஹெல்மெட் அணிவதன் அவசியம், ஓட்டுநர் உரிமம் குறித்த கருத்துக்களை வட்ட சட்டபணிகள் குழு வழக்கறிஞர் கணேசன் பேசினார். உலக உணவு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
1979ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையில் உணவு மற்றும் வேளாண் அமைப்பின் மூலம் இந்த தினம் அறிவிக்கப்பட்டது. பசியால் யாரும் வாடக் கூடாது. அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்பதே இந்த தினத்தின் உடைய நோக்கமாகும். துரித உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஆசிரியர் ராமமூர்த்தி பேசினார். உலகமயக்கவியல் தினத்தை முன்னிட்டு முதுகலைதமிழ் ஆசிரியர் பாஸ்கர் பேசும்போது, 1847ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி ஈதரை பயன்படுத்தி முதன்முறையாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. மருத்துவ உலகில் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட இந்த நிகழ்வு போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 16ம் நாள் உலகமயக்கவியல் தினமாக கொண்டாடப்படுகிறது என்று கூறினார். வட்ட சட்டபணிகள் தன்னார்வலர் மணிகண்டன் நன்றி கூறினார்.