திருச்சுழி, அக். 17: மலேசியாவில் உள்ள கிடா நகரில் உலக சிலம்பம் பெடரேஷன் சார்பில் உலகக் கோப்பை சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் திருச்சுழி அருகே உள்ள மினர்வா பப்ளிக் பள்ளி மாணவிகள் 3 பேர் கலந்து கொண்டனர். இதில், இரண்டாம் வகுப்பு மாணவி ரதியா நடுகம்பு வீச்சு, கம்புச்சண்டை போட்டியில் வெற்றி பெற்று இரண்டு தங்கப்பதக்கம் வென்றார். அதேபோல 7ம் வகுப்பு மாணவி தனஸ்ரீ மான்கொம்பு வீச்சில் தங்கப்பதக்கம், கம்புச்சண்டையில் வெண்கலப் பதக்கம், கம்பு அடிப்பாடத்தில் வெள்ளி பதக்கத்தை வென்றார். எட்டாம் வகுப்பு மாணவி கீர்த்தனா வாள்வீச்சு, கம்புச்சண்டை ஆகிய இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இரண்டு தங்கப் பதக்கங்களையும், தொடர்ச்சியாக நடைபெற்ற கம்பு அடிப்பாடத்தில் வெள்ளிப்பதக்கமும் பெற்றுச் சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவிகளுக்கு தாளாளர் கண்ணன், ஆசிரியர்கள் மாணவ, மாணவியர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பெற்றோர்கள் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.