ஓசூர், அக்.17: ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை தாலுகா பகுதிகளில் மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். மர்ம காய்ச்சலை கட்டுப்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. கிராமங்களில் அதிகாரிகள் நேரடியாக சென்று ஆய்வு நடத்தி, வீடுகளுக்கு அருகில் பழைய டயர், பாட்டிகள், உரல்கள் உள்ளிட்டவைகளில் மழைநீர் மற்றும் நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் குப்பைகளை அகற்றி சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என அறிவுரை வழங்கி வருகின்றனர். ஓசூர் ஒன்றியத்திற்குட்பட்ட பேகேப்பள்ளி, எழில்நகர், பாகூர், கோவிந்த அக்ரஹாரம் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் கொசு மருந்து புகை அடிக்கப்பட்டது. இந்த பணிகளை வட்டார வளர்ச்சி அலுவலர் அப்தாப்பேகம், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டென்சிங், ஆனந்தராஜ், பேகேப்பள்ளி பஞ்சாயத்து செயலர் முருகேஷ்ரெட்டி, சுகாதார ஆய்வாளர் ஆண்டோனிராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.