தர்மபுரி, அக்.17: இந்தியன் வங்கியின் ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில், இலவசமாக பிளம்பிங், மின் இணைப்பு வழங்கும் பயிற்சி பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து, தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைந்துள்ள இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனத்தில், சுய தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு அரசு சான்றிதழுடன் கூடிய தொழில் முனைவோருக்கான பயிற்சி இலவசமாக அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி மையத்தில், தற்போது, பிளம்பிங் ஒர்க் பயிற்சி, வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பயிற்சிகள் தொடங்கப்படவுள்ளன. பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் வரும் 22ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். வயது வரம்பு 18 முதல் 45 வயது வரையும், தமிழில் எழுத படிக்கத் தெரிந்த, சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள ஆண்கள், பெண்கள் பயிற்சியில் பங்கு பெறலாம். சுய உதவி குழுக்கள், வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பயிற்சியில், சேர ஆர்வமுள்ளவர்கள் தங்களது பெயர், முகவரி, பெற விரும்பும் பயிற்சி மற்றும் தொலைபேசி எண்ணுடன் நேரிலோ அல்லது அஞ்சல் அட்டை மூலம் விண்ணபிக்கலாம். விவரங்களுக்கு, இயக்குநர், இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம், கலெக்டர் அலுவலக வளாகம், தர்மபுரி 5 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்றார்.