புதுச்சேரி, அக். 17: மத்திய பாஜ அரசின் மோசமான பொருளாதார கொள்கை, நாட்டில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி, மகளை வதைக்கும் மோடி அரசை கண்டித்து புதுச்சேரியில் இடதுசாரிகள் கட்சிகள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை தபால் நிலையம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் சலீம் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிரதேச செயலாளர் ராஜாங்கம், பெருமாள், முருகன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் அமைச்சர் விசுவநாதன், நாரா.கலைநாதன், ஏஐடியுசி அபிஷேகம், சேதுசெல்வம், கீதநாதன், லெனினிஸ்ட் சார்பில் மோதிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் இடதுசாரி கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு மத்திய பாஜக அரசுக்கு எதிராக கண்டன முழக்கமிட்டனர். அப்போது போராட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் கூறுகையில், மத்திய அரசு வேலை வாய்ப்புகளை அதிகரித்து பொது முதலீட்டை மேம்படுத்த வேண்டும், பொது நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்ப்பதை நிறுத்த வேண்டும், விவசாய கடன்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.