×

மாணவனை முட்டிபோட வைத்து தாக்கிய ஆசிரியை மீது வழக்கு

காரைக்கால், அக். 17:    காரைக்கால் திருமலைராயன்பட்டினம் பகுதியில் இயங்கிவரும் தனியார் மேல்நிலை பள்ளியில் நிரவியை சேர்ந்த நவ்ய பிரசாத் (12), 7ம் வகுப்பு படித்து வருகிறார். மாணவன் நவ்ய பிரசாத்திடம் அப்பள்ளி ஆசிரியை மாலதி பள்ளி ரேங்க் கார்டில் கையெழுத்து போட, பெற்றோரை அழைத்து வருமாறு கூறியுள்ளார். ஆனால், மாணவனோ பெற்றோர் கோயிலுக்கு சென்றிருப்பதால் அழைத்துவர முடியவில்லை என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியை, மாணவனை கன்னம், கழுத்துபகுதியில் அடித்து, நீண்ட நேரம் வகுப்பறையில் முட்டிப்போட வைத்ததாக கூறப்படுகிறது. மாலை வீட்டுக்கு சென்ற மாணவன் நவ்யபிரசாத்துக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டு, காரைக்கால் அரசு பொதுமருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். மருத்துவமனையில் டாக்டர் மற்றும் பெற்றோர் விசாரித்தபோது, பள்ளியில் நடந்ததை மாணவர் நவ்யபிரசாத் கூறியுள்ளார்.

 இது பற்றி தகவலறிந்த காரைக்கால் சைல்டு லைன் ஒருங்கிணைப்பாளர் விமலா மற்றும் நிர்வாகிகள், மருத்துவமனைக்கு சென்று தாக்கப்பட்ட பள்ளி மாணவனிடம் விசாரணை நடத்தினர். சம்பவம் குறித்து மாணவனின் பெற்றோர் திருமலைராயன்பட்டினம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் போலீசார், தனியார் பள்ளி ஆசிரியை மாலதி மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், காரைக்கால் சேத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர் ஒருவர் சீனியர் மாணவர்களால் ராக்கிங் செய்து தாக்கப்பட்டதில், அந்த மாணவன் காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


Tags : Teacher ,student ,
× RELATED அரசு ஊழியர்கள் மீது கரிசனை போல...