×

சிவகங்கை டூ சென்னைக்கு 50 ஆண்டாக 2 ரயிலே இயக்கம்

n பயணிகள் கடும் அவதி n கூடுதலாக இயக்க கோரிக்கை
சிவகங்கை, அக். 16:  சிவகங்கை வழியாக சென்னை செல்ல கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை ரயில்வே ஸ்டேசன் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. இவ்வழியே இருந்த மீட்டர் கேஜ் பாதை அகற்றப்பட்டு கடந்த 2008ம் ஆண்டு அகல ரயில்பாதையாக மாற்றப்பட்டது. சிவகங்கையிலிருந்து சென்னை, திருச்சி, மன்னார்குடி, விருதுநகர், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி, புவனேஸ்வர், வாரணாசி உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னைக்கு தினந்தோறும் இரவு 7.45 மணிக்கு ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், 10.45 மணிக்கு சேது எக்ஸ்பிரஸ் என இரண்டு ரயில்கள் இயக்கப்படுகின்றன. வியாழன் மற்றும் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இரவு 8.45 மணிக்கு சிலம்பு எக்ஸ்பிரஸ் சென்னைக்கு இயக்கப்படுகிறது. ராமேஸ்வரம் மற்றும் சேது எக்ஸ்பிரஸ் இராமேஸ்வரத்திலிருந்தும், சிலம்பு எக்ஸ்பிரஸ் மானாமதுரையிலிருந்தும் சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி வழியாக சென்னை செல்கிறது. தற்போது சிவகங்கையிலுள்ள ஆயிரக்கணக்கான பயணிகள் சென்னை செல்ல ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். ஆனால் தினந்தோறும் இரண்டு ரயில்கள் மட்டுமே இயக்கப்படுவதால் எல்லா நாட்களிலும் டிக்கெட் கிடைப்பது அரிதாகவே உள்ளது. குறிப்பாக வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணம் செய்ய ரிசர்வேஷனில் டிக்கெட் கிடைப்பதில்லை. தட்கல் முறையிலான டிக்கெட் முதல் நாள் சில மணிநேரம் மட்டுமே கிடைக்கும்.

அன் ரிசர்வேஷன் பெட்டியில் சிவகங்கை நிறுத்தத்திற்கு முன்னதாகவே ராமேஸ்வரம், ராமநாதபுரம் போன்ற ஊர்களிலேயே ஏராளமான பயணிகள் ஏறிவிடுவதால் அதில் நிற்க கூட இடம் கிடைப்பதில்லை. சிவகங்கையிலிருந்து கல்வித்துறை உள்ளிட்ட அரசுத்துறை அலுவல் சம்பந்தமாக தினந்தோறும் சென்னைக்கு ஏராளமான அரசு அலுவலர்கள் பயணம் செய்கின்றனர். ஆனால் போதிய ரயில்கள் இல்லாததால் பயணிகள் கடும் அவதியடைய வேண்டிய நிலை உள்ளது. இதுகுறித்து பயணிகள் கூறியதாவது, ‘சிவகங்கையிலிருந்து சென்னைக்கு கடந்த 50 ஆண்டுகளாக இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்களே இயக்கப்பட்டு வருகிறது. முன்பு சென்னை செல்ல லோக்கல் என்ற பெயரில் அனைத்து சிறிய ஸ்டேசன்களிலும் கூட நின்று செல்லக்கூடிய ஒரு ரயில் இயக்கப்பட்டு வந்தது. நள்ளரவில் வரும் அந்த ரயிலிலும் கூட்டம் இருக்கும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அதுவும் நிறுத்தப்பட்டது. தற்போது சிவகங்கையிலிருந்து தொழில் மற்றும் அரசு அலுவல் ரீதியாக பயணம் செல்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும் பெண் பயணிகளுடன் சென்றால் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். எனவே தற்போதைய பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப இரவிலும், பகலில் சென்னை செல்லக்கூடிய வகையிலும் கூடுதல் ரயில்கள் இயக்க வேண்டும்’ என்றனர்.




Tags : Sivaganga ,Chennai ,
× RELATED சிவகங்கை தொகுதி வேட்பாளரின் பிரச்சார ஜீப் பறிமுதல்!