மானாமதுரை, அக். 16: மானாமதுரை நகர் ஆட்டோஓட்டுனர் மற்றும் உரிமையாளர்களுக்கு குழந்தை பாதுகாப்பு, சைல்டு லைன் 1098 இலவச தொலைபேசி எண் குறித்து மாவட்ட சைல்டுலைன் துணை மையம் மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட சைல்டுலைன் துணை மைய இயக்குனர் வனராஜன் தலைமை வகித்தார். சைல்டு லைன் உறுப்பினர் செல்வம் வரவேற்புரையாற்றினார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்து மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் ரசீந்திரகுமார், குழந்தைகளின் பாதுகாப்பில் போக்குவரத்து விதிகள் குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் சிவசங்கரநாரயணன், 1098 இலவச தொலைபேசி எண் மற்றும் சைல்டுலைன் செயல்பாடுகள் குறித்து துணை மைய ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினர். சைல்டு லைன் உறுப்பினர் காந்திமதி நன்றி கூறினார். இதில் 75 ஆட்டோ ஓட்டுனர் மற்றும் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை சைல்டுலைன் உறுப்பினர்கள் ராஜேஷ்,சாந்தி மற்றும் போக்குவரத்து காவலர்கள் செய்திருந்தனர்.