மதுரை, அக். 16: முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் 88வது பிறந்த தினத்தை முன்னிட்டு, இளைஞர் எழுச்சி நாளாக மதுரையில் பள்ளிகளில் கொண்டாடப்பட்டது.* மதுரையை அடுத்த ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சுவாமிநாதன், மரக்கன்றுகளை நட்டுவைத்தார். மேலூர் கல்வி மாவட்ட அலுவலர் மீனாவதி, பசுமை நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் பொன்குமார், பள்ளி தலைமையாசிரியர் பங்கஜம், ஆசிரியர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளியில் பணியாற்றக்கூடிய 68 ஆசிரியர்களும் மரக்கன்றுகளை நட்டனர். முன்னதாக மேலூர் கல்வி மாவட்டத்தில் பணிபுரியும் 3 ஆயிரத்து 876 ஆசிரியர்களும் ஒரே நேரத்தில் மரக்கன்றுகள் நடும்விதமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைத்து பள்ளிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டன.
* மதுரை வடக்கு வெளிவீதியில் உள்ள சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த தினத்தை முன்னிட்டு, அமுதசுரபி கலைமன்றம் சார்பில், நிறுவனர் பாலகிருட்டிணன் தலைமையில் ஏராளமான மாணவர்கள், உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. 2020ம் ஆண்டில் இந்தியா வல்லரசாக நாம் அனைவரும் பாடபட வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் மரம் வளர்ப்போம். கலாம் வழிமுறையை ஏற்று வழிநடப்போம் என உறுதிமொழி ஏற்றனர். மன்ற நிர்வாகிகள் கந்தசாமி, முரளி, சிவசங்கரகுமார், பாபுராஜேந்திர பிரசாத், மோகன்ராஜ், ஐகோர்ட் வக்கீல்கள் சங்க செயலாளர் கு. சாமிதுரை, புலவர் சங்கரலிங்கம், சேதுபதி பள்ளி தலைமையாசிரியர் நாராயணன், சமூக ஆர்வலர் இல. அமுதன் கலந்து கொண்டனர். அக்.15ம் தேதியை மாணவ, மாணவியர் தினமாக மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.