×

சிகிச்சை பலனின்றி டிரைவரும் சாவு பழநி விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆனது

பழநி, அக். 16: பழநி அருகே கார் மீது லாரி மோதிய விபத்தில் டிரைவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.கோவை மாவட்டம், பொள்ளாச்சி தாலுகா, ஆனைமலையை சேர்ந்தவர் சுதா (52).
இவரது சகோதரி திருநெல்வேலியை சேர்ந்த சக்கரவர்த்தி மனைவி ஜெயலட்சுமி (55). சுதாவை பார்ப்பதற்காக ஜெயலட்சுமி தனது பக்கத்து வீட்டை சேர்ந்த சீராஜ்தீன் மனைவி பாரிஜானுடன் (48) ஆனைமலை சென்றிருந்தார்.நேற்று முன்தினம் சுதா தனது காரில் சகோதரி ஜெயலட்சுமி, இவரது தோழி பாரிஜான், வீட்டில் பணிபுரியும் சுப்புலட்சுமி (56) ஆகியோருடன் திண்டுக்கல் மாவட்டம், பழநிக்கு கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். காரை ஆக்டிங் டிரைவர் ஆனைமலையை சேர்ந்த ஜெயபிரகாஷ் (40) ஓட்டி வந்தார்.
பழநி சண்முகநதி பைபாஸ் அருகே வந்த கார், முன்னால் சென்ற லாரியை முந்த முயன்றது.

அப்போது திடீரென கார், எதிரே வந்த லாரி மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ஜெயலட்சுமி, பாரிஜான் உயிரிழந்தனர். படுகாயமடைந்த சுதா, சுப்புலட்சுமி, ஜெயபிரகாஷ் ஆகியோர் சிகிச்சைக்காக பழநி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சுப்புலட்சுமி, ஜெயபிரகாஷ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் டிரைவர் ஜெயபிரகாஷ் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து பழநி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : accident ,
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!