×

5 மாதமாக ஊதியம் வழங்கவில்லை கலெக்டரிடம் உணவக பணியாளர்கள் மனு

தஞ்சை, அக். 16: ஐந்து மாதமாக வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை மாநகராட்சி நிர்வாகத்தில் இருந்து பெற்று தருமாறு தஞ்சை கலெக்டரிடம் அம்மா உணவக பணியாளர்கள் மனு அளித்தனர்.தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அம்மா உணவகம் உள்ளது. இங்கு பணியாற்றி வரும் வெற்றி மகளிர் சுய உதவிக்குழு பெண் பணியாளர்கள், கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அம்மா உணவகத்தில் கடந்த 4 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். மாநகராட்சி ஆணையர் உத்தரவின்பேரில் 12 பெண்கள் இணைந்து வெற்றி மகளிர் சுய உதவிக்குழுவை உருவாக்கி செயல்பட்டு வருகிறோம். ஆனால் கடந்த மே மாதம் முதல் எங்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் ஊதியம் வழங்கவில்லை.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டபோது அங்கு பணியாற்றும் கார்த்திகா என்பவரை குழுவுக்கு தலைவராக நியமிக்க வேண்டுமென வருவாய் உதவி அலுவலர்கள் பிரகாஷ், திருமுருகன் வற்புறுத்துகின்றனர். இல்லையென்றால் தற்போதுள்ள குழுவை கலைத்துவிட்டு புதிய குழுவை உருவாக்கி கார்த்திகா என்பவரை தலைவராக நியமிக்க வேண்டுமென கட்டாயப்படுத்தி வருகின்றனர். இல்லையென்றால் ஊதியம் வழங்கப்படாது என வெளிப்படையாக எங்களுக்கு நெருக்கடி கொடுக்கின்றனர். மாநகராட்சி அலுவலர்கள் ஏன் இவ்வாறு ஊதியம் தர மறுக்கின்றனர் என்பது புரியவில்லை.இந்த ஊதியத்தை நம்பி தான் குடும்பத்தை நடத்தி வருகிறோம். 5 மாதமாக ஊதியம் வழங்கப்படாததால் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளோம். இந்நிலையில் ஊதியம் தர மறுத்து மனஉளைச்சலுக்கு ஆளாக்கி வருகின்றனர். புதிய குழுவை உருவாக்கி அதற்கு குறிப்பிட்ட ஒருவரை தலைவராக நியமிக்க வலியுறுத்துவதை மாநகராட்சி நிர்வாகம் கைவிட வேண்டும். மேலும் எங்களுக்கு நிலுவையில் உள்ள 5 மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : collector ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...