உளுந்தூர்பேட்டை, அக். 16: உளுந்தூர்பேட்டை மற்றும் எம்.குன்னத்தூர், புகைப்பட்டி, எலவனாசூர்கோட்டை, நகர், செங்குறிச்சி, காட்டுநெமிலி உள்ளிட்ட சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று காலை முதல் மாலை வரையில் விட்டு, விட்டு மழை பெய்து வந்தது. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இது போல் பெய்து வந்த மழையினால் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராம பொதுமக்கள், விவசாயிகள், மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் கடந்த சில நாட்களாக கடுமையாக நிலவி வந்த வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது. வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ளதாக வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளதால் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் மானாவாரியாக உளுந்து பயிரிடுவதற்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.