×

சீமான் மீது வழக்கு பதிய எஸ்பியிடம் காங். புகார்

கடலூர், அக். 16: கடலூர் காவல்துறை எஸ்பி அபிநவிடம் மாவட்ட மீனவர் காங்கிரஸ் தலைவர் கடல் கார்த்திகேயன் தலைமையில் தேசிய குழு உறுப்பினர் சந்திரசேகரன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
கடந்த 1991ம் ஆண்டு மே 26ம் தேதி முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி தமிழக சுற்றுப்பயணத்தின்போது பெரும்புதூரில் கொலை செய்யப்பட்டார். அவருடன் 21 தமிழர்களும் பாதிக்கப்பட்டனர். கொலை செய்யப்பட்டதன் பின்னணியில் வெளிநாட்டவர் சதி இருப்பதாக பரவலாக பேசப்பட்டது. இதற்கிடையே விடுதலைப்புலிகள் கூலிப்படையை ஏவிவிட்டார்கள், இதன் காரணமாக ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் ராஜீவ்காந்தியை நாங்கள் கொன்றோம் என்று ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்துள்ளார். பிரசார பயணத்தில் அவர் பேசியது பதிவாகியுள்ளது. எனவே ராஜீவ்காந்தி கொலைக்கு சீமான் தான் காரணம் என்று அவரே சொன்னதால் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். உண்மையை உலகிற்கு கொண்டு வரவேண்டும். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கடலூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விசாரணை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  

Tags : seaman ,SP ,
× RELATED சொல்லிட்டாங்க…