×

சேலம் அருகே நடந்த வியாபாரி கொலையில் மேலும் ஒருவர் கைது

சேலம், அக்.16: சேலத்தை அடுத்துள்ள வலசையூர் காட்டூரை சேர்ந்தவர் கணேசன் (32), முறுக்கு வியாபாரி. இவரை கடந்த ஏப்ரல் மாதம் 5ம் தேதி மர்மநபர்கள், கொலை செய்து மேட்டுப்பட்டி தாதனூர் பஸ் ஸ்டாப் அருகே அரூர் சாலையில் போட்டுவிட்டுச் சென்றனர். காரிப்பட்டி போலீசார் கணேசனின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தியதில், காட்டூர் மாரியம்மன்கோயில் திருவிழாவின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக, அப்பகுதியை சேர்ந்த முத்து தரப்பினர், ரவுடிக்கும்பலை ஏவி தீர்த்துக் கட்டியதும் தெரிந்தது. இக்கொலையில், பிரபல ரவுடியான காட்டூர் ஆனந்தன், மேட்டுப்பட்டி தாதனூரை சேர்ந்த ரவுடி கதிர்வேல் உள்ளிட்ட 7 பேர் கும்பல் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனிடையே கோர்ட்டில், முத்து, பழனிசாமி, கார்த்தி ஆகியோர் சரணடைந்தனர். தொடர்ந்து, முருகன், கோபி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். ரவுடி கதிர்வேல், போலீஸ் பிடியில் இருந்து தப்பியபோது என்கவுன்டர் செய்யப்பட்டார்.இவ்வழக்கில் தலைமறைவான ரவுடி காட்டூர் ஆனந்தன், மாணிக்கம் ஆகிய இருவரை பிடிக்க காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் கேசவன் தலைமையிலான தனிப்படை போலீசார், தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். அதில் நேற்று காலை, வீராணம் அருகேயுள்ள பீமனூரை சேர்ந்த விஜயன் மகன் மாணிக்கம் (28), தனிப்படை போலீஸ் பிடியில் சிக்கினார். அவரை போலீசார் கைது செய்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்ந்து ரவுடி காட்டூர் ஆனந்தனை தேடி வருகின்றனர்.

Tags : murder ,Salem ,businessman ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்