அரூர், அக்.16: அரூர் தாலுகாவில் உள்ள வெளாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், பரிசளிப்பு விழா நடந்தது. ரிசர்வ் வங்கியின் உதவி பொது மேலாளர் தாமோதரன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். வங்கிச்சேவை, சேமிப்பு, குறைதீர்வு போன்றவற்றை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். கடந்த ஆண்டு பள்ளி இறுதி தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள், பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் வினாடி-வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது. இவ்விழாவில் மாவட்ட நபார்டு வங்கியை சேர்ந்த மாவட்ட முன்னேற்ற மேலாளர் பார்த்தசாரதி, நிதியியல் கல்வி ஆலோசகர் எழில்மணி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். விழாவில் பள்ளிக்கு ரிசர்வ் வங்கி சார்பாக இலவசமாக ஒலிபெருக்கி, மைக், ஸ்பீக்கர் போன்ற சாதனங்கள் வழங்கப்பட்டது. இதை பெற்றோர் -ஆசிரியர் கழக தலைவர் வைரப்பன் பெற்றுக்கொண்டார். தலைமை ஆசிரியர்(பொ) எட்வர்ட் சாம்சன் நன்றி கூறினார்.