×

செங்குன்றம் அருகே பரபரப்பு பெண் உள்பட 3 பேருக்கு சரமாரி வெட்டு

புழல், அக். 16: செங்குன்றம் அருகே கள்ளக்காதலி தூண்டுதலின்பேரில், மற்றொரு வீட்டில் வசித்த ஒரு பெண் உட்பட 3 பேரை கள்ளக்காதலன் கத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளார்.  செங்குன்றம் அடுத்த கோட்டூர், கோமதியம்மன் நகர் பிரதான சாலையில் மூர்த்தி என்பவர் 2 வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வீட்டின் கீழ்தளத்தில் சித்ரா (29), அவரது கணவர் ராஜ் மற்றும் மகன் மோனிஷ் (10), சித்ராவின் தம்பி கார்த்திக் (26) ஆகியோர் வசித்து வருகின்றனர்.வீட்டின் மேல்தளத்தில் சுரேஷ் என்பவரின் மனைவி பவித்ரா (30), கணவரை பிரிந்து தனியே வசித்து வருகிறார். அதே தெருவை சேர்ந்த வினோத் என்பவருக்கும் பவித்ராவுக்கும் கள்ளத் தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்த கள்ளத்தொடர்பு விவகாரத்தை சித்ரா வீட்டு உரிமையாளர் மூர்த்தியிடம் கூறியிருக்கிறார். இதனால் வீட்டை காலி செய்யும்படி பவித்ராவிடம் மூர்த்தி கூறியுள்ளார்.  

இதுகுறித்து கள்ளக்காதலன் வினோத்திடம் பவித்ரா கூறிவிட்டு, கடந்த சில நாட்களுக்கு முன் அந்த வீட்டை பூட்டிக்கொண்டு, தனது சொந்த ஊரான தஞ்சைக்கு சென்றுவிட்டார். இதில் ஆத்திரம் அடைந்த வினோத், நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் சித்ராவின் வீட்டுக்குச் சென்று வாய்த்தகராறில் ஈடுபட்டார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதில் ஆத்திரமான வினோத் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சித்ரா, கார்த்திக், மோனிஷ் ஆகியோரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி ஓடினார்.
இதில் 3 பேருக்கும் தலை, கை கால்களில் பலத்த வெட்டு காயம் ஏற்பட்டது. அவர்களை சித்ராவின் கணவர் ராஜ் மீட்டு, பாடியநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சைக்கு சேர்த்தார். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் மேல்சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இப்புகாரின்பேரில் செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய வினோத் மற்றும் அடையாளம் தெரியாத ஒருவரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும், தஞ்சைக்கு சென்ற பவித்ராவையும் விசாரிக்க போலீசார் தீர்மானித்து உள்ளனர்.

Tags : precinct ,paramedic woman ,
× RELATED அம்பன் புயல் முன்னெச்சரிக்கை பிரதமர் தலைமையில் ஆலோசனை