×

திருப்பத்தூர் அருகே குடும்ப தகராறில் பயங்கரம் கிணற்றில் தள்ளி மனைவி கொலை மாடு முட்டி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவர் சிக்கினார்

திருப்பத்தூர், அக்.16: திருப்பத்தூர் அருகே குடும்ப  தகராறில் மனைவியை கிணற்றில் தள்ளி கொலை செய்துவிட்டு மாடு முட்டி உயிரிழந்ததாக நாடகமாடிய கணவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு ஜவ்வாது மலை ரங்கசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி குமரேசன்(30). இவரது மனைவி திவ்யா(25). இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் உள்ளார். இந்நிலையில், குமரேசனின் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவுக்கார பெண்ணுடன் குமரேசன் நெருங்கி பழகி வந்தாராம். இதையறிந்த திவ்யா தன் கணவரை கண்டித்தார். இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த மாதம் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த குமரேசன் தன் மனைவியை சரமாரியாக அடித்து உதைத்தார். அதில், திவ்யா பலத்த காயமடைந்தார். உடனே அவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதையறிந்த திவ்யாவின் தாயார் பார்வதி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை முடிந்ததும், திவ்யாவை தன் வீட்டுக்கு அழைத்துச்செல்வதாக குமரேசனிடம் கூறினார். ஆனால், அதற்கு குமரேசன் மறுப்பு தெரிவித்து மனைவியை நல்ல முறையில் பார்த்துக்கொள்வதாகவும், மகன் இருப்பதால் இனி எந்த தவறும் நடக்காது எனவும் பார்வதியிடம் உறுதியளித்தார். இதையேற்ற பார்வதி தன் மகளை குமரேசன் வீட்டில் விட்டுவிட்டு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு உறவுக்கார பெண் வீட்டுக்கு சென்ற குமரேசன் நீண்ட நேரம் ஆகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால் கோபமடைந்த திவ்யா அந்த பெண்ணின் வீட்டுக்கே சென்று அங்கிருந்த கணவரை கண்டித்தார். பிறகு, கோபித்துக்கொண்டு தன் தாய் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

அவரை பின் தொடர்ந்து சென்ற குமரேசன், சில மணி நேரம் கழித்து தன் வீட்டுக்கு வந்தார். அக்கம், பக்கத்தினரிடம் திவ்யா தாய் வீட்டுக்கு செல்லும் போது எதிரே வந்த மாடு அவரை முட்டியதில் விவசாய கிணற்றில் விழுந்து விட்டதாக கூறி கதறினார். உடனே, ஊர் பொதுமக்கள் கிணற்றில் விழுந்த திவ்யாவை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் திவ்யா ஏற்கனவே இறந்து விட்டதாகவும், அவரது உடலில் பல்வேறு இடங்களில் காயம் இருப்பதாகவும் தெரிவித்தனர். இதற்கிடையே, அரசு மருத்துவமனைக்கு வந்த பார்வதி தன் மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தியதில், தாய் வீட்டுக்கு செல்லும்போது ஏற்பட்ட தகராறில் திவ்யாவை தாக்கி கிணற்றில் தள்ளி குமரேசன் கொலை செய்து, மாடு முட்டி கிணற்றில் விழுந்து உயிரிழந்து விட்டதாக நாடகமாடியது தெரியவந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் குமரேசனை நேற்று பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : family dispute ,Thirupattur ,
× RELATED டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுமி பலி: திருப்பத்தூர் அருகே சோகம்