×

பெரம்பலூர் குறைதீர் கூட்டத்தில் 295 கோரிக்கை மனுக்கள் குவிந்தன

பெரம்பலூர், அக். 15: பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 295 கோரிக்கை மனுக்கள் குவிந்தன.
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் சாந்தா தலைமை வகித்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாற்றம், தொழில் தொடங்க கடனுதவி, வேலைவாய்ப்பு, வீட்டுமனை பட்டா உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 295 பேர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அந்த மனுக்களை பெற்ற சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரருக்கு உரிய பதிலை அளிக்குமாறு அறிவுறுத்தினார். மேலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்கள் மீது தனிகவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டு தகுதியான அனைவருக்கும் அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சென்றடையுமாறு பணியாற்ற வேண்டுமென அரசுத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து வேளாண்மை இயந்திரமயமாக்கல் உப இயக்கம் 2019-20 திட்டத்தின்கீழ் ராமகிருஷ்ணன், மூக்கன் ஆகியோருக்கு தலா ரூ.11 லட்சம் மானியத்தில் நெல் அறுவடை இயந்திரம், சுற்றுலாத்துறை சார்பில் உலக சுற்றுலா தினத்தையொட்டி பெரம்பலூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு ரொக்கப்பரிசை கலெக்டர் சாந்தா வழங்கினார். கூட்டத்தில் டிஆர்ஓ ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தெய்வநாயகி உட்பட அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Tags : grievance meeting ,Perambalur ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தேர்வுப் போட்டி