×

பட்டிவீரன்பட்டி அருகே இரண்டு ஆண்டிலே புது சாலை ‘டேமேஜ்’ தரமான பணியில்லைனெ புகார்

பட்டிவீரன்பட்டி, அக். 15: பட்டிவீரன்பட்டி அருகே அ.பிரிவு- வெங்கடாஸ்திரிகோட்டை சாலை அமைத்த 2 ஆண்டிலே குண்டும், குழியுமாகி விட்டது. பட்டிவீரன்பட்டி அருகே அ.பிரிவிலிருந்து வெங்கடாஸ்திரி கோட்டை வரை சுமார் 2 கிமீ சாலை செல்கிறது. வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட இச்சாலையை அய்யம்பாளையம், பட்டிவீரன்பட்டி, தேவரப்பன்பட்டி, அய்யங்கோட்டை, லட்சுமிபுரம், மரியாயிபட்டி, எம்.வாடிப்பட்டி போன்ற 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நிலக்கோட்டை, கொடைரோடு, மதுரை, உசிலம்பட்டி போன்ற ஊர்களுக்கு செல்ல பயன்படுத்தி வருகின்றனர். மறுமார்க்கத்தில் உசிலம்பட்டியிலிருந்து மேலக்கோவில்பட்டி வழியாக அ.பிரிவு வருவதற்கும், மதுரை, நிலக்கோட்டையிலிருந்து வத்தலக்குண்டு நகருக்கு செல்லாமல் அ.பிரிவு வந்து அங்கிருந்து மற்ற ஊர்களுக்கு செல்வதற்கு இந்த இணைப்பு ரோடு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும். மேலும் இக்கிராமங்களை சேர்ந்த பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் இந்த சாலையை அதிகளவில் பயனப்படுத்தி வருகின்றனர்.

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இச்சாலை கடந்த 2017ம் ஆண்டு ஒருங்கிணைந்த ஒப்படைப்பு வருவாய் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.27.74 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக போடப்பட்டது. இந்நிலையி–்ல 2 ஆண்டுகள் கூட ஆகாத நிலையில் இப்புதிய தார் சாலை போடப்பட்ட அடையாளமே தெரியாமல் பல இடங்களில் சிதைந்து போய் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக இரவுநேரங்களில் டூவீலர்களில் செல்வோர் பள்ளம் தெரியாமல் விபத்தில் சிக்கி வருவது தொடர்கதையாக உள்ளது. மேலும் இந்த மோசமான ரோட்டில் செல்வதால் வாகன பழுது, பஞ்சர் என செலவு ஏற்படுகிறது. இதனால் பலர் இந்த ரோட்டில் செல்வதை தவிர்த்து வத்தலக்குண்டு சென்று அங்கிருந்து சுமார் 7 கிமீ சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே வத்தலக்குண்டுவில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. இதில் இப்பகுதியை சேர்ந்த வாகனங்களும் செல்வதால் மேலும் போக்குவரத்து நெரிசலுக்கு வழிவகுப்பதாக உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘2 ஆண்டிலே சாலை குண்டும், குழியுமாக ஆவதற்கு தரமில்லாத பணியே முக்கிய காரணமாகும். தரமில்லாத ரோட்டால் அனைத்து தரப்பினரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே நல்ல தரமான ரோடு போட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : road ,Pativeeranpatti ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...