×

சேலம்-கரூர்-திருச்சி பாசஞ்சர் ரெகுலர் ரயிலாக அறிவிப்பு

சேலம், அக்.15: சேலம்-கரூர்-திருச்சி இடையே சிறப்பு பாசஞ்சர் ரயிலாக இயக்கப்படும் ரயிலை ரெகுலர் ரயிலாக அறிவித்து, அதன் இயக்கத்தை இன்று (15ம்தேதி) ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தொடங்கி வைக்கிறார்.
சேலம்-நாமக்கல்-கரூர் இடையே 85 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிதாக அகல ரயில்பாதை அமைக்கப்பட்டது. இந்த புதிய வழித்தடத்தில் சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் (இரு மார்க்கத்தில் 4 சேவை), இயக்கப்பட்டு வருகிறது. மேலும், சென்னை-பழனி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை துரந்தோ ரயில் உள்ளிட்டவையும் இம்மார்க்கத்தில் செல்கிறது. இதுபோக திருச்சி-கரூர் பாசஞ்சர் ரயில், கடந்த 7 மாதத்திற்கு முன் சேலம் வரை நீட்டிக்கப்பட்டு, கரூர்-சேலம் சிறப்பு பாசஞ்சர் ரயிலாக இயக்கப்பட்டு வந்தது. இந்த சிறப்பு பாசஞ்சர் ரயில், திருச்சியில் இருந்து கரூருக்கு வந்ததும், காலை 11.40 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு மதியம் 1.25 மணிக்கு வந்து சேர்கிறது. மறுமார்க்கத்தில் சேலத்தில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு நாமக்கல் வழியே கரூருக்கு பிற்பகல் 3.25 மணிக்கு சென்றடைகிறது. அதன்பின் அந்த ரயில், கரூரில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டுச் செல்கிறது.

இந்த கரூர்-சேலம் சிறப்பு பாசஞ்சர் (76801, 76802) ரயிலை ரெகுலர் ரயிலாக இயக்கினால் திருச்சிக்கு செல்ல வசதியாக இருக்கும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர். இக்கோரிக்கையை ரயில்வே அமைச்சகம் ஏற்றுக் கொண்டு, கரூர்-சேலம் சிறப்பு பாசஞ்சர் ரயிலை ரெகுலர் ரயிலாக அறிவித்துள்ளது. இதன் முதல் இயக்கத்தை இன்று மதியம் 2 மணிக்கு, டெல்லியில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் மூலம் மத்திய ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.  நாடு முழுவதும் முக்கிய நகரங்களுக்கு இடையே கரூர்-சேலம் பாசஞ்சர் போல் சேவா ரயிலாக இயங்கி வந்த 10 ரயில்களை ரெகுலர் ரயிலாக அவர் தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில் சேலம்-கரூர் பாசஞ்சர் போலவே, கோவை-பழனி-கோவை பாசஞ்சர் (56609, 56608),  பொள்ளாச்சி-கோவை-பொள்ளாச்சி பாசஞ்சர் (56184, 56183) ஆகியவையும் இன்று முதல் ரெகுலர் ரயிலாக இயக்கப்படுகிறது. சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில் இன்று நடக்கும் சேலம்-கரூர் பாசஞ்சர் ரயில் சேவை தொடக்க விழாவில், கோட்ட மேலாளர் சுப்பாராவ், எம்பி, எம்எல்ஏக்கள், அதிகாரிகள் கலந்துகொள்கின்றனர்.

Tags : Passenger ,Salem-Karur ,Trichy ,
× RELATED திருவொற்றியூரில் ரூ.60 லட்சம்...