திருச்செங்கோடு, அக்.15: திருச்செங்கோடு அருகேயுள்ள எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில், மத்திய அரசை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் அன்புமணி தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் கந்தசாமி. இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் சுரேஷ், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் மாரிமுத்து, செங்கோட்டுவேல் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் போது, ரிசர்வ் வங்கியில் இருந்து எடுக்கப்பட்ட ₹1.76 ஆயிரம் கோடியை பொது முதலீடு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க பொது முதலீட்டை அதிகரிக்க வேண்டும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். முதியோர் மற்றும் விதவைகளுக்கு மாதம் குறைந்தபட்சம் ₹3 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். மோட்டார் வாகன சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பபட்டன. மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் நன்றி கூறினார்.