கரூர், அக். 15: கலெக்டர் அலுவலக வளாக தரைத்தளப் பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள பழைய பர்னிச்சர்களை இந்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.தாந்தோணிமலை அருகே கலெக்டர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. தரைத்தள வளாகத்தில், மனுக்கள் பெறும் அலுவலகம் உட்பட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இரண்டு மற்றும் மூன்றாவது தளங்களிலும் பல்வேறு பிரிவு அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் தரைத்தளத்தில் உள்ள ஒரு காலிப்பகுதியில், கலெக்டர் அலுவலக வளாகத்தில் பல ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு, பழுதடைந்துள்ள பர்னிச்சர்கள் அனைத்தும் ஒரே இடத்தில் மொத்தமாக கொட்டி வைக்கப்பட்டுள்ளது.பயனற்ற நிலையில் உள்ள இந்த பர்னிச்சர்களை, பழுது பார்த்து மீண்டும் வேறு வகையில் பயன்படுத்திட வேண்டும் அல்லது இந்த அலுவலக வளாக பகுதியில் இருந்து இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுநல ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். துறை அதிகாரிகள் இதனை பார்வையிட்டு தேவையான மாற்று ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.