திருப்பூர், அக். 15: திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை நிறுவனங்களில் 14 வயத்திற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்கள் குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவது அதிகரித்துள்ளது. திருப்பூர் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பல ஆயிரக்கணக்கான பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள், பஞ்சாலை நிறுவனங்கள் இயங்கி வருகிறது. பின்னலாடை நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்களுக்கு ஆடைகளை பேக் செய்வது, ஒரு பகுதியிலிருந்து இன்னொரு பகுதிக்கு இடமாற்றி வைப்பது, டெய்லர்களுக்கு மேல் வேலை செய்து கொடுப்பது, அரசி அரவை ஆலைகளில் உள்ள கலத்தில் கொட்டப்படும் நெல் மூட்டைகளை பரப்பி காய வைப்பது, செங்கல் சூளைகளில் காய்ந்த செங்கல்களை மாற்றி வைப்பது உட்பட பல்வேறு வேலைகளுக்கு குழந்தை தொழிலாளர்களை பயன்படுத்துகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக வடமாநில தொழிலாளர்கள் குடும்பத்துடன் திருப்பூர் வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஏதாவது ஒரு வேலை செய்கின்றனர்.
வீட்டில் உட்கார்ந்து பொழுதை கழிப்பது இல்லை. வடமாநில தொழிலாளர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டிய வயதில் குழந்தை தொழிலாளியாக மாறிவருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பின்னலாடை உற்பத்தி, பஞ்சாலை உட்பட பல்வேறு தொழில் நிறுவனங்களில் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் அவதிப்படும் நிலையில் 14 வயதிற்குட்பட்ட குழந்தை தொழிலாளர்களையும் வேலைக்கு வைத்துள்ளனர். இது குறித்து கண்காணிக்க வேண்டிய அதிகாரிகள் அதை கவனிப்பதில்லை. யாராவது ஒருவர் புகார் கொடுத்தால் மட்டுமே சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு நடத்தி குழந்தை தொழிலாளர்களை மீட்கின்றனர். அந்நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்து அபராதம் வசூலிக்கின்றனர்.
இது குறித்து மக்கள் விழிப்புணர்வு இயக்கத்தின் செயலாளர் தமிழ்மணி கூறியதாவது: திருப்பூர், கோவை, ஈரோடு, கரூர், திருச்சி உட்பட பல்வேறு தொழில் நகரங்களில் வடமாநில தொழிலாளர்கள் நிறுவனத்தின் குடியிருப்புகளில் வசிக்கின்றனர். இதனால், யார் உள்ளே வேலை செய்கிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது. அதிகாரிகள் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு சென்று ஆய்வு நடத்த வேண்டும். குழந்தை தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தியுள்ளார்களா என்பது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.