×

கொள்ளை பணத்தை பங்கு பிரிப்பதில் மோதல்

சோமனூர், அக்.15:  கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 4 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.திருப்பூரில் இருந்து அவிநாசி வழியாக 2 பைக்குகளில் நண்பர்கள் 4 பேர் நேற்று மாலை கோவையை நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அவர்களது வாகனம் கணியூர் டோல்கேட் அருகே வந்தபோது வாக்குவாதம் முற்றி பைக்கில் பயணித்தவாறே ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 4 பேரும் சாலையில் விழுந்தனர். தொடர்ந்து அவர்கள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக வெட்டி தாக்கினர். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் கருமத்தம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் கருமத்தம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் சண்முகம் சம்பவ இடத்திற்கு சென்று 4 பேரையும் பிடித்து விசாரித்தார். அப்போது அவர்கள் தமிழரசன் (21), தர்ஷன் (23), ராகுல் குமார் (23), சிவராஜ் (23) என்பது தெரியவந்தது.

இவர்கள் 4 பேருக்குள் கொள்ளையடித்த பணத்தை பங்கு பிரிப்பதில் வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. இந்த மோதலில் காயம் அடைந்த தமிழரசன், தர்ஷன், ராகுல் குமார் ஆகிய மூவரும் சிங்காநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பப்பட்டனர். சிவராஜ் உயிருக்கு ஆபத்தான நிலையில் கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.நடு ரோட்டில் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் 4 வாலிபர்கள் தாக்கிக்கொண்ட இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Conflict ,separation ,
× RELATED உட்கட்சி மோதலால் கர்நாடகாவில்...