×

கோபி அருகே 1000 ஆண்டு பழமையான மலை மீது திருக்குறள் கல்வெட்டாக பதிக்க நிதி உதவி கிடைக்குமா?

கோபி, அக்.15:  கோபி அருகே 1000 ஆண்டு பழமையான திருக்குறள் கல்வெட்டு மலை மீது திருக்குறளை கல்வெட்டாக பதிக்க கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். பல்வேறு உலக நாடுகள் இதற்கு நிதி உதவி வழங்க முன்வரும் நிலையில் அரசு மட்டும் மவுனம் காத்து வருவதாக அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கோபி அருகே உள்ள மலையப்பாளையத்தில் ஆயிரம் ஆண்டு பழமையான சுமார் 30 ஏக்கர் பரப்பளவில் இயற்கையாக அமைந்துள்ள மலை மீது 200 அடி உயரத்தில் உதயகிரி முத்துவேலாயுதசாமி கோயில் உள்ளது.
இந்த மலை மீது திருக்குறளை கல்வெட்டாக பதிப்பதற்கு குறள் மலைச்சங்கம் என்ற அமைப்பில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் கடந்த 15 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். தமிழகம் முழுவதும் பல்வேறு மலைகளை பல ஆண்டுகளாக ஆய்வு செய்த அந்த சங்கத்தினர் இறுதியாக இந்த மலையில் திருக்குறளை கல்வெட்டாக பதித்தால் நிலநடுக்கம் போன்ற இயற்கை சீற்றங்களை தாக்கு பிடித்து பல நூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் என்பதால் இந்த மலையை அவர்கள் தேர்வு செய்து அரசின் அனுமதியை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் பெற்றனர். அதன்பின், மலையில் ஒரு திருக்குறளை கல்வெட்டாக பொறித்து அரசின் பார்வைக்கு அனுப்பினர். இதைத்தொடர்ந்து, அரசு சார்பில் பல்வேறு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கையை அரசுக்கு அனுப்பினர்.

133 அதிகாரங்களில் உள்ள 1330 திருக்குறளையும் அதற்கான பொருளை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பொறிக்க அரசு அனுமதி அளித்தது. இந்த கல்வெட்டை உருவாக்க சுமார் ரூ.100 கோடி ரூபாய் வரை செலவாகும் என்ற நிலையில் பல்வேறு நாடுகளில் உள்ள தமிழ் ஆர்வலர்கள் நிதி உதவி அளிக்க முன் வந்தனர். இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் மொரீசியஸ் நாட்டின் அதிபர் வையாபுரி பிள்ளை திருக்குறள் கல்வெட்டை பார்வையிட்டு மொரீசியஸ் அரசு சார்பாக நிதி வழங்குவதாக உறுதி அளித்துச்சென்றார். இவ்வாறு பல்வேறு நாடுகளில் இருந்தும் நிதி உதவி கிடைக்கும் சூழ்நிலையில் தமிழக அரசு சார்பில் பங்களிப்பாக ரூ.10 கோடி வழங்கினால் மட்டுமே இந்த பணியை தொடர முடியும். இதற்காக, தமிழக முதல்வரை குறள் மலைச்சங்கத்தினர் பலமுறை நேரில் சென்று சந்தித்தனர்.

ஆனால், இதுவரை தமிழக அரசு தனது பங்களிப்பை வழங்கவில்லை. இது குறித்து தமிழ் ஆர்வலர்கள் கூறுகையில், இந்த திருக்குறள் கல்வெட்டு மலை அமைந்தால் உலக அளவில் திருக்குறளுக்கு என உள்ள ஒரே கல்வெட்டு மலையாக இது இருக்கும். பண்டைய காலங்களில் ஆட்சி செய்த மன்னர்கள் குறித்து கல்வெட்டுகள் உள்ளதாலேயே இன்றளவும் மன்னர்கள் ஆட்சி முறையை அறிந்து கொள்ள முடிகிறது. தற்போது, பேப்பரில் அச்சடிக்கப்பட்டுள்ள திருக்குறள் ஏதாவது ஒரு கால கட்டத்தில் அழிய நேரிடலாம். ஆனால், கல்வெட்டாக இருந்தால் பல நூறு ஆண்டுகள் அழியாமல் பாதுகாக்க முடியும். மேலும், இதை சுற்றுலா தளமாக மாற்றினால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி மாணவ, மாணவிகளுக்கும் திருக்குறளின் பெருமையை உணர்த்த முடியும் என்றனர்.

Tags : Thirukkural ,Gopi ,hill ,
× RELATED திருக்குறளில் வேள்வி!