×

ஊதிய உயர்வு, போனஸ் வழங்க கோரி இண்ட்கோ தொழிலாளர்கள் போராட்டம்

குன்னூர், அக். 15:தமிழக அரசின் இண்ட்கோ தொழிற்சாலைகளின் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு மற்றும் போனஸ் வழங்க கோரி நுழைவாயில் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். குன்னூரை தலைமையிடமாக கொண்டு 16 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஊதிய  உயர்வு வழங்குவது, அனைத்து தொழிற்சாலைகளுக்கும் ஒரே மாதிரியான போனஸ், தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி கடன் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெண்கள் உட்பட நுாற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இண்ட்கோ அலுவலகத்திற்கு சென்ற போது, காவல்துறை அனுமதி மறுத்ததால், நுழைவாயில் முன்பு தமிழக அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர், அதிகாரிகள் தரப்பில்  பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒவ்வொரு தொழிற்சாலையிலும் புகார் பெட்டி வைக்கப்படும். அனைத்து தொழிற்சாலைகளிலும்  குறை தீர்ப்பு கூட்டம் நடத்தப்படும், சம்பள உயர்வு, போனஸ் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர். அரசு தீர்வு காணாவிட்டால், வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த போராட்டம்  சிஐடியு மாவட்ட தலைவர் ஆல்துரை தலைமையில் நடைபெற்றது.  செயலாளர் கோபிகுமார், பொருளாளர் நவீன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Indigo ,
× RELATED சென்னை விமான நிலையத்தில் பயணிகளுக்கு புதிய வசதி