குன்னூர், அக். 15: நீலகிரி மாவட்டத்தில் அக்டோபர் மாதம் முதல் இரண்டாம் சீசன் தொடங்கியுள்ளது. தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் தற்போது நீலகிரி மாவட்டத்திற்கு வருகின்றனர். அதனால் மாவட்டம் முழுவதும் உள்ள பூங்காக்கள் மற்றும் சுற்றுலா தலங்களில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிகின்றனர். குறிப்பாக, குன்னூர் பகுதியில் சிம்ஸ் பூங்கா, காட்டேரி பூங்கா, டால்பின் நோஸ், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் வாடகை வாகன ஓட்டிகள் மற்றும் காட்டேஜ்கள், ஓட்டல்களில் கூட்டம் அலைமோதி வருகிறது. வரக்கூடிய சுற்றுலா பயணிகள் சிம்ஸ் பூங்கா மற்றும் காட்டேரி பூங்காக்களில் பூத்து குலுங்கும் மலர்களை கண்டு ரசித்து செல்கின்றனர். குன்னூர்-ஊட்டி, குன்னூர்- மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு நூற்றாண்டு பழமையான மலை ரயிலில் பயணிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.