மணமேல்குடி, அக்.15: மணமேல்குடி அக்ரகாரம் சாலை பலவருடங்களுக்கு முன் தார்சாலையாக போடப்பட்டிருந்தது. தற்போது இந்த சாலை பராமரிப்பு இல்லாததால் தார்சாலை இருந்த அடிச்சுவடே இல்லாமல் மண்சாலையாக மாறி இருசக்கர வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி கிழக்கு கடற்கரை சாலையிலிருந்து கிழக்கே பிரியும் முக்கிய சாலையாக அக்ரகாரம் சாலை உள்ளது. இந்த சாலை கடற்கரை கோடியக்கரை செல்லும் சாலையாகவும், பொன்னகரம், நல்லூர், வடக்கம்மாபட்டினம், ஆகிய கிராமங்களுக்கு செல்லும் சாலையாகவும் உள்ளது.
மேலும் ஊராட்சி ஒன்றியம், தாசில்தார் அலுவலகம் அரசு மருத்துவமனை அரசு தொடக்கப் பள்ளி செல்லும் சாலையாகவும் உள்ளது.தற்போது இந்த சாலை தார்சாலை இருந்த அடிச்சுவடே இல்லாமல் மண்சாலையாகவும், பள்ளம் படுகுழியாக மாறிவிட்டது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்வோர், நடந்து செல்வோர் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும் மழைக்காலங்களில் பள்ளங்களில் தண்ணீர் குளம்போல் தேங்கி பலர் பள்ளம் தெரியாமல் தடுமாறிவிழும் நிலையும் உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனே தார்சாலை அமைத்து தர வேண்டுமென இப்பகுதிமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.