×

அரசுப் பள்ளிகளை மூடினால் இலவச கல்வி தர முடியாது

சென்னை, அக். 15: அரசுப் பள்ளிகளை மூடினால் இலவச கல்வி தர முடியாது. அரசுப் பள்ளிகளை பாதுகாப்பது ஏழை குழந்தைகளின் கல்வியை பாதுகாப்பதாகும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பேட்டியின் போது கூறினார்.
பெரியபாளையம் அருகே எல்லாபுரம் ஒன்றியம் ஆயிலச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சிங்கிலிகுப்பம் கிராமத்தில் தனியார் நிலத்தில் 1962-ல் ஓலை குடிசையில் துவங்கப்பட்ட அரசு ஆரம்பப்பள்ளி, குறுகிய இடத்தில் கட்டப்பட்ட தொடக்கப்பள்ளியும் பாழடைந்துள்ளதால் அந்த கட்டிடம் 2007-முதல் மூடியே கிடக்கிறது. இதனால் மாணவர்கள் படிக்க இடமில்லாமல் தவித்து வந்தனர். பள்ளி கட்டிடம் இல்லாததால் மகளிர் சுய உதவி கட்டிடத்தில் தற்போது அரசு பள்ளி இயங்கி வருகிறது.

இங்கு பல ஆசிரியர்கள் பணியாற்றி வந்தாலும் நிலமையை கண்டும், காணாமல் இருந்துள்ளனர். தமிழக அரசும், அதிகாரிகளும் கூட கண்டு கொண்டதாக தெரியவில்லை. இந்நிலையில் 2010க்குப் பிறகு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற பாஸ்கரன் என்பவர் குழந்தைகளின் கல்வி மேம்பட வேண்டும் என்ற எண்ணத்தில் தொடர்ந்து பல முயற்சிகளை மேற்கொண்டார். சில நன்கொடையாளர்களிடம் ரூ. 21 லட்சம் நிதி திரட்டி உடைந்து போன ஓடுகளை அகற்றி, பொது மக்கள், முன்னாள் மாணவர்கள் பங்களிப்போடும் மற்றும் சொந்த பணத்தையும் செலவு செய்து 1400-சதுர அடி பரப்பளவில் இரண்டு வகுப்பறைகளை தற்போது புதிதாக கட்டப்பட்டு வருகிறது. மேலும் வகுப்பறைகளை நவீனமயமாக்கும் வகையில் தொடு திரை வகுப்பறைகளாக மாற்றியுள்ளனர். இதன் காரணமாக தற்போது 45-மாணவர்கள் வரை படித்து வருகின்றனர்.

இந்த தகவலை நண்பர் ஒருவரின் முகநூல் மூலம் அறிந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நேற்று  சிங்கிலிகுப்பத்தில் அமைந்துள்ள தொடக்கப்பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். குழந்தைகளுடன் பேசினார். ஆர்வமுடன் செயல்படும் தலைமை ஆசிரியர் பாஸ்கரின் சமூக பணியை பாராட்டினார். பின்னர் செய்தியாளர்களிடம்  ஜி.ராமகிருஷ்ணன் பேசுகையில்,         ‘’மத்திய அரசு புதிய கட்டாய கல்விக்கொள்கையில் 3 வயது முதல் 18 வயது வரை கட்டாய இலவச கல்வி வழங்க வேண்டும் என கூறிவிட்டு, அதே நகலில்  20க்கும் குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள அரசுப் பள்ளிகளை மூட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு 20க்கும் குறைவான மாணவர்கள் படிக்கக்கூடிய பள்ளிகளை மூடினால்  இலவச கல்வி தர முடியாது. அரசுப் பள்ளிகளை பாதுகாப்பது ஏழை குழந்தைகளின் கல்வியை பாதுகாப்பதாகும் ‘’ என கூறினார்.  

Tags : closure ,schools ,
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...