×

பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கத்தில் கால்வாய் மீது கட்டிடம் கட்டுவதை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

பொன்னேரி, அக்.15:  பொன்னேரி அருகே தடப்பெரும்பாக்கத்தில் மழைநீர் கால்வாயை அடைத்து தனியார் சிலர் கட்டிடம் கட்ட முயன்றதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்த கிராமப்புற பகுதியில் இருந்து மழைகாலங்களில் வெள்ளநீரும், குளம், குட்டைகளில் உள்ள உபரிநீரும் வெளியேற மழைநீர் கால்வாய் உள்ளது.  இந்நிலையில், அப்பகுதியை ஆக்கிரமித்து காம்ப்ளக்ஸ் கட்டும் நோக்கில் சுற்றுசுவர் கட்டுவதற்கான பணிகளை கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு சிலர் துவக்கினர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கால்வாயை அடைத்து மழைநீரை தடுக்கும் இப்பணியினை கைவிடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு அதிகாரிகள் செய்த சமரசத்தால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் பணியினை தொடரக்கூடாது என அதிகாரிகள் தரப்பில் நிபந்தனையும் வைக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று கால்வாயை அடைத்து  கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்றது. இதனை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் திரண்டு வந்தனர். கட்டிடம் கட்டுவதற்காக தயாராக வைத்திருந்த இரும்பு கம்பிகளால் ஆன கட்டுமான பொருட்களை பறித்தனர். பின்னர் பொன்னேரி - திருவெற்றியூர் சாலையின் குறுக்கே இரும்பு  கம்பிகளை போட்டு மறியல் செய்ததால் வாகன போக்குவரத்து தடைபட்டது. தகவல்  அறிந்த பொன்னேரி காவல்துறையினர் சம்பவ இடத்தக்கு விரைந்து ெசன்று சாலை மறியல் செய்த பொதுமக்களை சமாதானப்படுத்தினர். கால்வாயை அடைத்து கட்டிடம் கட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதை ஏற்று போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  

Tags : Ponneri ,canal building ,
× RELATED தேர்தலுக்காக பள்ளிகளில் ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களை அகற்றுவதில் சிரமம்