புதுச்சேரி, அக். 15: தீபாவளி பண்டிகை வருகிற 27ம்தேதி கொண்டாடப்படுகிறது. இதற்கு இன்னும் 12 நாட்களே உள்ள நிலையில் பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள், ஆடை ரகங்கள், பட்டாசுகள் உள்ளிட்டவற்றை வாங்க மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் முக்கிய கடைவீதிகளில் விடுமுறை நாட்களில் கூட்டம் அலைமோதுகிறது. விடுமுறை தினமான நேற்று முன்தினம் புதுச்சேரிக்கு நகர பகுதியினர் மட்டுமின்றி கிராமப்புறங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் தீபாவளி பண்டிகை–்கு தேவையான பொருட்களை வாங்க குவிந்தனர். இதனால் காந்திவீதியில் உள்ள சன்டே மார்க்கெட்டில் வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது. பண்டிகை கால ஜவுளி விற்பனை, வீட்டு உபயோக பொருட்களை அவர்கள் ஆர்வமுடன் தேர்வு செய்து வாங்கிச் சென்றனர். இதனால் புதுச்சேரி- கடலூர் சாலை, அண்ணா சாலை, காமராஜர் சாலை, நேரு வீதி, புஸ்சி வீதி உள்ளிட்ட சாலைகளில் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நேருவீதி, அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.
தீபாவளிக்கு முந்தைய 3, 4 நாட்களில் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்த கிழக்கு காவல்சரக போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். வழக்கமாக தீபாவளிக்கு 2 வாரங்களுக்கு முன்பே பாப்ஸ்கோ நிறுவனம் சார்பில் தீபாவளி பஜார் நடத்தப்பட்டு மளிகை பொருட்கள், பட்டாசுகள் உள்ளிட்ட அனைத்து வகை பொருட்களும் மலிவான விலையில் விற்பனை செய்யப்படும். இதற்கு மக்களிடம் மிகுந்த வரவேற்பு இருந்த நிலையில் தற்போது கடும் நிதி நெருக்கடி, ஊழியர்களுக்கு சம்பளம் போடாத பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் பாப்ஸ்கோ தீபாவளி பஜாரை நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.