×

தலைஞாயிறு கடைவீதியில் பயிர் காப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம், அக்.15:தலைஞாயிறு கடைவீதியில் பயிர் காப்பீட்டு தொகை கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேதாரண்யம் தாலுகா தலைஞாயிறு கடைவீதி அருகே திமுக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி விவசாய சங்கத்தினர் இணைந்து 2018-19 ஆண்டு கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி பயிர் காப்பீட்டு தொகை உடனே 100 சதவீதம் வழங்ககோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்பாட்டத்திற்கு தலைஞாயிறு பேரூர் திமுக பொறுப்பாளர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நாகை எம்பி செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ காமராஜ், இந்திய கம்யூனிஸ் கட்சி விவசாய சங்கம் மாவட்ட செயலாளர் சம்மந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வேணு, உழவர் உரிமை இயக்கம் காளிதாசன், மதிமுக ஒன்றிய செயலாளர் உத்ராபதி, விடுதலை சிறுத்தை கட்சி, காங்கிரஸ் கட்சி, விவசாய சங்கத்தினர் உள்பட முக்கிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அய்தர் அலி நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு நாகை நாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் பேசியதாவது. பயிர் காப்பீட்டு தொகையில் தலைஞாயிறு பகுதியில் சில கிராமங்களுக்கு குறைந்த இழப்பீடு வழங்கி இருப்பதை மறுபரிசீலனை செய்து முழுமையாக இழப்பீடு வழங்க வேண்டும். கடவுளை வணங்க வேண்டியதில்லை, வயலில் இறங்கி வியர்வை சிந்தி பாடுபடும் விவசாயிகளை வணங்கினாலே போதும். கஜா புயல் பாதிப்பிற்கு காயத்திற்கு மருந்து தடவுவதுபோல நிவாரணம் வழங்கியுள்ளனர். நாகை மாவட்டத்தில் 146 கிராமங்களை சேர்ந்த 27 ஆயிரம் விவசாயிகளுக்கு நிவாரணம் விடுபட்டுள்ளது. அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம் வழங்கிடவும் நூறு நாள் வேலைவாய்ப்பை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்றார்.

Tags :
× RELATED பொறையாரில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தேர்தல் விழிப்புணர்வு முகாம்