×

வாலிபர் அடித்து கொலை 6 பேர் மீது போலீசார் வழக்கு

திருவெண்ணெய்நல்லூர், அக். 15:  திருவெண்ணெய்நல்லூர் அருகே வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.    விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அடுத்த அமாவாசைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சிவராஜ்(32). இவருக்கும், பெண்ணைவலம் கிராமத்தை சேர்ந்த ஜோதி என்பவருக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து அவர்கள் இருவரும் அமாவாசைபாளையம் கிராமத்திலேயே வசித்து வந்துள்ளனர். கணவன், மனைவிக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். இதேபோல் 11ம் தேதி மீண்டும் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணவன் மீதுள்ள கோபத்தில் ஜோதி அவரின் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். அன்று மாலை சிவராஜ் தன் மனைவியை அழைத்து வருவதற்காக ஜோதியின் தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார்.அப்போது ஜோதியின் உறவினருக்கும், சிவராஜிக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் ஜோதியின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து சிவராஜை ஆபாசமாக திட்டி தாக்கியுள்ளதாக தெரிகிறது.

 இதையடுத்து தன் வீட்டிற்கு திரும்பி வந்த சிவராஜ் மீண்டும் மறுநாள் 12ம் தேதி அதிகாலை பெண்ணைவலம் சென்றுள்ளார். அப்போது அங்கு நின்றிருந்த பொக்லைன் இயந்திரம் ஜோதியின் உறவினருக்கு சொந்தமானது என்று நினைத்துக்கொண்டு அதை அடித்து உடைத்துள்ளார். இதையடுத்து பொக்லைன் இயந்திரத்திற்கு சொந்தமான அதே ஊரைச்சேர்ந்த கலியபெருமாள் மகன் அப்பாஸ், பெருமாள் மகன்கள் ஏழுமலை, வீரமுத்து, பெருமாள், தனக்கோட்டி மனைவி ஜெயந்தி, ஏழுமலை மனைவி காவேரி உள்ளிட்ட 6பேரும் சேர்ந்து சிவராஜை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர்.  அங்கு சிகிச்சை பலனின்றி சிவராஜ் நேற்று முன்தினம் மதியம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிவராஜின் அண்ணன் மகன் பார்த்திபன் திருவெண்ணெய்நல்லூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் அப்பாஸ் உள்ளிட்ட 6பேர் மீது இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags :
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை