நாகை, அக்.15: நாகை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரவீன் பி நாயர் தலைமையில் நடந்தது. மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டத்தில் வங்கி கடன், உதவித்தொகை உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி 17 மனுக்கள் வந்தது. ரேசன்கார்டு, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி 308 மனுக்கள் வந்தது. ஆக மொத்தம் 325 மனுக்கள் வந்தது.
மனுவை பெற்ற கலெக்டர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கொடுத்து விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் பின்னர் தரங்கம்பாடி சின்னங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஏலாச்சி கடந்த 2004ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமியின் போது உயிரிழந்தார். இதை முன்னிட்டு அவரது வாரிசுதாரர் பெயரில் பிரதமரின் குழந்தை உதவித் திட்டத்தின் கீழ் வைப்புத்தொகையாக வைக்கப்பட்டது. பயனாளிகள் 18 வயது பூர்த்தி அடைந்ததால் அந்த தொகையை விடுவிக்கும் ஆணைகளை பிறப்பித்து உயிரிழந்தவரின் வாரிசுதாரர்கள் வெற்றிவேல், நந்தினி ஆகியோரிடம் வழங்கினார். டிஆர்ஓ இந்துமதி, தனித்துணை கலெக்டர் ராஜன் மற்றும் பலர் உடனிருந்தனர்.