×

நெய்வேலி நகர பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு அதிகரிப்பு

நெய்வேலி, அக். 15: நெய்வேலி டவுன்ஷிப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் கப், கேரி பேக்குகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வரதுவங்கியுள்ளது.தமிழக அரசு பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடை விதித்துள்ளது. ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியும் நெகிழிப்பைகள், டீ கப்புகளுக்கு பயன்பாடு முற்றிலும் தடை விதித்து கடந்த ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வந்தது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து கடைகள், உணவகங்கள், டீக்கடைகளில் பிளாஸ்டிக் கவர் பயன்பாடு நிறுத்தப்பட்டது. இதனால் பொதுமக்கள் பிளாஸ்க்குகள் மற்றும் சில்வர் பாத்திரங்களைக்கொண்டு டீ, காபி மற்றும் உணவு பண்டங்களை வாங்கி சென்றனர்.

இதனால் உணவகங்களில் வாழை இலை பயன்பாடு அதிகரித்துள்ளது. ஆனால் நெய்வேலி நகரில் ஸ்டார் ரோடு, மெயின் பஜார், சூப்பர் பஜார், புதுக்குப்பம் ரவுண்டானா, மத்திய பேருந்து நிலையம் உள்ளிட்ட ஓட்டல்கள் மற்றும் சாலையோர கடைகளில் மீண்டும் தடை செய்யப்பட்ட பேப்பர் கப்புகள் கேரி பேக்குகள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இறைச்சி கடைகளில் காய்ந்த வாழை இலை போன்றவற்றை பயன்படுத்தாமல் பிளாஸ்டிக் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளதால் காய்ந்த வாழைஇலை, பாக்குமர இலை, தட்டு, தாமரை இலை, பயன்பாடு குறைந்துள்ளது. நெய்வேலி நகர நிர்வாக அதிகாரிகள் கடைகளில் சோதனை செய்யாததால் மறைமுகமாக பிளாஸ்டிக் கவர்கள் விற்பனை நடைபெற்று கொண்டிருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து அரசு உத்தரவை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.


Tags : Neyveli ,
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...