மார்த்தாண்டம், அக். 15: உள்ளாட்சி அமைப்புகளில் வார்டு சமீபத்தில் மறுவரையறை செய்யப்பட்டது. இதில் 750 முதல் 1,000 வரை வாக்காளர்கள் உள்ள வகையில் வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டன. சிறிய வார்டுகள் இணைக்கப்பட்டும், பெரியவை பிரிக்கப்பட்டும் புதிய வார்டுகள் உருவாக்கப்பட்டு வரைபடமும் வெளியிடப்பட்டுள்ளது. வார்டுகள் மாற்றியமைக்கப்பட்டதில் பல குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. தற்போது உள்ளாட்சி தேர்தலுக்கு என தயாரித்து வெளியிடப்பட்டுள்ள வாக்காளர் பட்டியலில் ஒரு வீட்டில் உள்ளவர்களின் பெயர்கள் 2 வார்டுகளில் பிரிந்துள்ளது. குறிப்பாக கணவனின் பெயர் ஒரு வார்டிலும், மனைவியின் பெயர் மற்றொரு வார்டிலுமாக வருகிறது. இதே போல ஒரே வீட்டில் வசிக்கும் உறவினர்களின் பெயர்களும் 2 வார்டுகளில் வருகிறது.
அதாவது ஒரு பிளாக்கை உடைக்காமல் வார்டு பிரிக்கப்பட்ட இடங்களில் பெரும்பாலும் குழப்பங்கள் இல்லை. ஆனால் ஒரு பிளாக்கை இரண்டாக உடைத்து வேறுவேறு வார்டுகளில் இணைத்துள்ள இடங்களில் வாக்காளர்களின் பெயர்கள் பிரிந்து கிடக்கின்றன. இதனால் கடும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. உள்ளாட்சி தேர்தலின்போது இது பெரும் சிக்கலை உருவாக்கும் என அரசியல் பிரமுகர்கள் தெரிவிக்கின்றனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. எனவே இதுபோன்று பிரிந்து கிடக்கும் பெயர்களை ஒன்று சேர்த்து ஒரே வார்டில் வரும்படி வாக்காளர் பட்டியலை சரிவர தயாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.