×

தக்கலையில் வாகன சோதனையின் போது எஸ்.ஐ.யை தாக்கிய 2 வாலிபர்கள் கைது கொலை முயற்சி உள்பட 4 பிரிவுகளில் வழக்கு

தக்கலை, அக்.15: தக்கலையில் வாகன சோதனையில் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய கல்குவாரி தொழிலாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
குமரி மாவட்டம் தக்கலை போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் டைட்டஸ் ஜாய்சன் தலைமையில் நேற்று முன் தினம்  மாலை தக்கலை பழைய பஸ் நிலைய ரோட்டில் போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டு இருந்தனர். ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டி வந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது நெல்லை மாவட்டம் வடக்கன்குளம் பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்ற பரத் (26), வடக்கன்குளம் தெற்கு மார்க்கெட் ரோடு பகுதியை சேர்ந்த ஜேசு ரக்ஸன் (23) ஆகியோர் அந்த வழியாக  பைக்கில் வேகமாக வந்தனர்.  பரத், பைக்கை ஓட்டி வந்துள்ளார். அவர் ஹெல்மெட் அணியவில்லை. இதையடுத்து போலீசார் சைகை செய்து பைக்கை நிறுத்தி சாவியை எடுக்க முயன்றனர். அப்போது அந்த வாலிபர்கள் பைக்கில் வேகமாக தப்ப முயன்றனர். இதனால் அங்கிருந்த போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பரத் மற்றும் ஜேசு ரக்ஸன் ஆகியோர் திடீரென போலீசாரை ஆபாசமாகவும், தரக்குறைவாகவும் பேசியதுடன், சப் இன்ஸ்பெக்டர் ஜாய்சனை சரமாரியாக தாக்கி, பைக்கில் இருந்த சாவியை எடுத்து கழுத்தில் குத்தியதாக கூறப்படுகிறது.

இதில் லேசான காயத்துடன் அவர் உயிர் தப்பினார். உடனடியாக அருகில் இருந்த போலீசார், சப் இன்ஸ்பெக்டர் ஜாய்சனை மீட்டனர். பின்னர் சப் இன்ஸ்பெக்டரை தாக்கிய பரத் மற்றும் ேஜசு ரக்ஸன் ஆகிய இருவரையும் தக்கலை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தக்கலை  இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ் தலைமையில் போலீசார் விசாரணை நடத்தி பரத், ஜேசு ரக்ஸன் இருவரையும் கைது செய்தனர். இருவரின் மீது 294 (பி) (ஆபாசமாக பேசுதல்), 307 (கொலை முயற்சி), 353 (அரசு பணி செய்ய விடாமல் தடுத்தல்), 506 (2) (மிரட்டல் விடுத்தல்) ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் தோட்டிக்கோட்டில் உள்ள கல்குவாரியில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.

குமரி மாவட்டத்தில் விபத்துக்களை தடுக்கும் வகையில் ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த வாகன சோதனையின் போது போலீசார் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர் கதையாகி உள்ளன. ஏற்கனவே நாகர்கோவிலில் தொடர்ந்து 2, 3 சம்பவங்கள் நடந்துள்ளன. நாகர்கோவில் செட்டிக்குளத்தில் வாகன சோதனையின் போது பைக் ஏற்றி, போலீஸ்காரர் ஒருவரை கொல்ல முயற்சி நடந்தது. இதில் சம்பந்தப்பட்ட வாலிபர்களை போலீசார் சமீபத்தில் தான் கைது செய்தனர். இந்த நிலையில் இப்போது தக்கலையில் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : youths ,vehicle test ,murder ,Takala ,
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...