×

மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக 12 லட்சம் மோசடி செய்தவரை அறையில் அடைத்து சித்ரவதை: இருவரிடம் போலீசார் விசாரணை

சென்னை: மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக 12  லட்சத்தை மோசடி செய்த நபரை, தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்த இருவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  எழும்பூர் காவல் ஆணையர் சாலையை  சேர்ந்தவர் ஜெயராஜ் (55). இவர், வேல்முருகன் என்பவருக்கு மின் வாரியத்தில் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்துள்ளார். மேலும், இந்த வேலைக்காக ₹12 லட்சத்தை வேல்முருகனிடம் ஜெயராஜ் வாங்கி உள்ளார். ஆனால், பல  நாட்களாகியும் சொன்னபடி மின் வாரியத்தில் வேலை வாங்கி தரவில்லை. இதனால், வேலைக்காக கொடுத்த 12 லட்சத்தை வேல்முருகன் திரும்ப கேட்டுள்ளார். அதற்கு ஜெயராஜ், நான் ரவி என்பவரிடம் பணத்தை கொடுத்து விட்டேன், என்று  தெரிவித்துள்ளார். இதற்கிடையே, ஜெயராஜ் செல்போனில் தொடர்பு கொண்ட நபர் ஒருவர்,  ‘நான் குமார் பேசுகிறேன்.

வேலை விஷயமாக உங்களை சந்திக்க வேண்டும். மயிலாப்பூர் மாதா சர்ச் சாலைக்கு வரமுடியமா?, என கேட்டுள்ளார். அதன்படி ஜெயராஜ் கடந்த 2ம் தேதி மேற்கண்ட இடத்துக்கு வந்துள்ளார். அங்கிருந்த குமார் மற்றும் பணம் கொடுத்து  ஏமார்ந்த வேல்முருகன் ஆகியோர் ஜெயராஜை பிடித்து, ஒரு வீட்டின் அறையில் அடைத்து, பணம் கேட்டு சித்ரவதை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பிய ஜெயராஜ், இதுகுறித்து நேற்று முன்தினம் இரவு மயிலாப்பூர் காவல்  நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து குமார் மற்றும் வேல்முருகனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், கடந்த 2ம் தேதி நடந்த சம்பவத்திற்கு 8 நாட்கள் கழித்து ஏன் புகார் அளித்தார் என  ஜெயராஜிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : room ,
× RELATED வாக்காளர்களுக்கு விநியோகம் செய்த ₹22 ஆயிரம் சிக்கியது அணைக்கட்டு அருகே