×

வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, அக்.10: சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஓர் ஆண்டு நிறைவடைந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு சார்பில் வேலை வாய்ப்பற்றோர் உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மூன்று மாதத்தொகையாக ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை படித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 தேர்ச்சி அடைந்தவர்களுக்கு ரூ.750, பட்டதாரி, முதுகலை பட்டதாரிகளுக்கு ரூ.ஆயிரம் வழங்கப்படுகிறது. சுமார் 10 ஆண்டு காலத்திற்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. உதவித்தொகை நேரடியாக வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். எஸ்.சி, எஸ்.டி 45 வயதுக்கு மிகாமலும், மற்ற பிரிவினர் 40 வயதுக்கு மிகாமலும் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு கிடையாது. வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி என பதிவு செய்திருக்க வேண்டும்.

 பிற அரசு அலுவலகங்களில் உதவித் தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் இவ்வலுவலகத்தின் மூலம் வழங்கப்படும் உதவித் தொகை பெற இயலாது. நடப்பு காலாண்டிற்கு சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டிய மனுதாரர்கள், சுய உறுதிமொழி ஆவணத்துடன் தற்போதைய தேதி வரை குறிப்புகள் இடப்பட்ட வங்கி கணக்கு புத்தகத்தை இணைத்து வழங்கி உதவித்தொகை பெறலாம். சுய உறுதி மொழி ஆவணம் சமர்ப்பிக்காத பயனாளிகளுக்கு உதவித்தொகை நிறுத்தப்படும். கடந்த காலாண்டில் சுய உறுதிமொழி ஆவணப்படிவம் சமர்ப்பிக்காதவர்களுக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் படிவம் சமர்பித்து உதவித்தொகை பெறலாம். உதவித்தொகை பெறுவதற்கு தகுதிகள் உள்ளவர்கள் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு அனைத்துக் கல்விச் சான்றுகள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பம் பெற்றுக் கொள்ளலாம். உதவித்தொகை பெறுவதால் அரசு வேலை வாய்ப்பு பரிந்துரை பாதிக்கப்படாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED கண்மாய்க்குள் வாலிபர் தற்கொலை