×

சம்பள நிலுவை கோரி சேடபட்டி யூனியனில் காத்திருப்பு போராட்டம்

பேரையூர், அக். 10: சம்பள நிலுவை தொகை வழங்க கோரி சேடபட்டி யூனியன் அலுவலகத்தில் பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. சேடபட்டி யூனியன் அலுவலகத்தில் ஓஹெச்டி ஆபரேட்டர்கள், துப்புரவு பணியாளர்கள் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தினர். ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை கிராம பஞ்சாயத்து பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் தங்கவேல்பாண்டியன் தலைமை வகிக்க, மாவட்ட பொதுச் செயலாளர் பொன் கிருஷ்ணன், திருப்பரங்குன்றம் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் முன்னிலை வகித்தனர்.

 போராட்டத்தில் 7வது ஊதியக்குழுவின்படி குறைந்தபட்ச கூலியாக ஓஹெச்டி ஆபரேட்டர்களுக்கு ரூ.10 ஆயிரமும், துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.13 ஆயிரமும் வழங்க வேண்டும், சம்பள நிலுவை மற்றும் அரியர்ஸ் நிலுவை தொகையை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.  பின்னர் ஆணையாளர் கதிரவன் பேச்சுவார்த்தை நடத்தி இதுதொடர்பாக மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்து சம்பள நிலுவை தொகை, தீபாவளி முன்பணமும் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதன்பிறகே பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Sedapatti Union ,
× RELATED உசிலம்பட்டி அருகே பள்ளத்தில் சரிந்த...