×

பழநியில் பொதுமக்களுக்கு தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி

பழநி, அக். 10: பழநி பகுதியில் தீயணைப்புத்துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 15 நாட்களே உள்ளது. பட்டாசு வெடிப்பதனால் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதன் காரணமாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் அந்தந்த பகுதியில் உள்ள தீயணைப்பு நிலையங்கள் மூலமாக பொது மக்களுக்கு தீ விபத்து தடுப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. குடிசைப்பகுதிகள் அதிகமாக உள்ள பகுதிகளில் தற்போது தீயணைப்புத்துறையினர் விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகின்றனர். தவிர, பள்ளிகளிலும் செயல்முறை விளக்கத்துடன் கூடிய விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி பழநியில் குடிசைகள் அதிகமுள்ள மதினா நகர், தெரசம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் பழநி தீயணைப்பு துறையினரின் சார்பில் தீ தடுப்பு விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீ ஏற்படும் வழிமுறைகள், தீ விபத்தின் வகைகள், பட்டாசுகளை பாதுகாப்பாக வெடிக்கும் முறை, தீக்காயம் பட்டவர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய முதலுதவி சிகிச்சைகள், எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் உள்ளிட்டவை தொடர்பாகவும், தீவிபத்து ஏற்பட்டால் தகவல் தெரிவிக்கும் முறைகள் குறித்தும் எடுத்துரைத்தனர்.

Tags : civilians ,Palani ,
× RELATED பழநியில் அனுமதியற்ற மனைகளை வாங்க வேண்டாம்